ஆப்கானித்தான் தாக்குதலில் இரண்டு ஆத்திரேலியப் படையினர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 21, 2010

ஆப்கானித்தானில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆத்திரேலியப் படையினரின் வாகனம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை கண்ணிவெடியில் சிக்கியதில் இரு ஆஸ்திரேலியப் படையினர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இரு ஆத்திரேலியர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


ஆப்கானிஸ்தானின் பலூச்சி பள்ளத்தாக்கில் காலை 10:30 மணிக்கு இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எவ்வாறு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது இதுவரையில் அறியப்படவில்லை என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் இறந்தவர்களின் குடும்பத்துக்குத் தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.


அடுத்த இரண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியப் படையினர் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருப்பர் என அறிவிக்கப்படுகிறது.


நேற்றைய இழப்புகளுடன் ஆப்கானித்தானில் மொத்தம் 21 ஆஸ்திரேலியர்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். சென்ற வாரம் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஒரு ஆஸ்திரேலியர் கொல்லப்பட்டார். இவ்வாண்டு மட்டும் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


இன்று ஆஸ்திரேலியாவில் போதுத்தேர்தல்கள் இடம்பெறும் தருணத்தில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்[தொகு]