ஆப்பிரிக்க யானை இனம் 15 ஆண்டுகளுக்குள் அழியும் அபாயம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 26, 2009:


ஆப்பிரிக்க யானை இனம், இன்னும் 15 ஆண்டுகளில் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பன்னாட்டு விலங்குகள் நல அமைப்பு எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள வனப் பகுதிகளில் ஏராளமான அரிய வகை விலங்குகள் வசிக்கின்றன.


இவற்றில், ஆப்பிரிக்க யானைகள் மிகவும் பலம் பொருந்தியவை. அகன்ற காதுகள், மிக நீளமான தும்பிகைகளுடன் இவை தோற்றமளிக்கும்.


தற்போது அதன் தந்தங்களே அந்த யானை இனத்தின் அழிவுக்குக் காரணமாக அமைந்து விட்டது. ஆப்பிரிக்க யானைகளின் விலை மதிப்பற்ற தந்தங்களுக்காக அவற்றை பல சட்டவிரோத கும்பல்கள் வேட்டையாடி வருகின்றன.


கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சட்ட விரோதமான சில பகுதிகளில் ஆபிரிக்க யானைத் தந்தங்கள், அதிக விலைக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அவற்றை வேட்டையாடும் போக்கு அதிகரித்து வருகிறது. இது குறித்து பன்னாட்டு விலங்கு கள் நல நிதியம் தெரிவித்துள்ளதாவது,


சர்வதேச அளவில் போதைமருந்து, ஆயுத கடத்தல் ஆகிய சட்ட விரோத வியாபாரம் தான் மிக அதிக விலை மதிப்பிற்கு நடக்கிறது.


இவற்றுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது யானைத் தந்தம் வியாபாரம், ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபா அளவுக்கு இந்த வியாபாரம் சர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கிறது. தினமும் 104 யானைகள் தந்தங்களுக்காக வேட்டை யாடப்படுகின்றன.


இந்த போக்கு தொடர்ந்தால் இன்னும் 15 ஆண்டுகளில் ஆப்பிரிக்க யானை இனமே முழுவதுமாக இல்லாமல் அழிந்து விடும்.

மூலம்