ஆயுதங்களுடன் வந்த ஐக்கிய அரபு அமீரக விமானம் கொல்கொத்தாவில் தடுத்துவைக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டம்பர் 7, 2009, கொல்கத்தா, இந்தியா:


கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கிய ஐக்கிய அரபு அமீரக நாட்டு விமானப் படை விமானத்தில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து விமானம் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.


அபுதாபியிலிருந்து சீனா செல்லும் வழியில் கொல்கத்தாவில் அந்த விமானம் தரையிறங்கியது. அப்போது விமானத்தில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் இருப்பது குறித்து அதன் விமானிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.


இது பன்னாட்டு சட்ட விதிகளுக்கு முரணானது என்பதால் அதைச் சுங்க இலாகா அதிகாரிகள் சிறை பிடித்தனர். அதிலிருந்த விமானிகள் உள்ளிட்ட 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


சீனாவின் ஹன்யாங் நகருக்குச் சென்று கொண்டிருந்த அந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கொல்கத்தாவில் தரையிறக்க அனுமதி கோரியது. இதை ஏற்று இந்திய விமானப் படையின் கிழக்கு மண்டல அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.


விமானம் தரையிறங்கியதும் சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கமான சோதனைக்காக அதில் ஏறியபோது ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் இருந்ததைத் கண்டு அதிர்ந்தனர்.


விமானத்தில் இந்த ஆயுதங்கள் இருப்பதை விமானிகள் மறைத்தது தெரியவந்தது. இதையடுத்து இந்திய வான் பரப்பில் பறக்க அந்த விமானத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியையும் விமானப் படை ரத்து செய்தது.


விமானிகள் உள்ளிட்ட 9 பேரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இப்போது விமானம் சீல் இடப்பட்டு விமான நிலையத்தின் தனிப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


சீனாவின் ஹன்யாங் பகுதி ஆயுத உற்பத்திக்குப் பேர் பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்[தொகு]