இந்தியத் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகள் உள்ளடக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 5, 2013

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளும் வரும் என்று இந்திய நடுவண் தகவல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அரசியல் கட்சிகள் ‘பொது நிறுவனங்களாக’ கருதப்பட வேண்டும் என்றும், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று மத்திய தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.


‘ஆறு தேசியக்கட்சிகள் (காங்கிரஸ், பாஜக, சிபிஐ (எம்), சிபிஐ, என்சிபி, பகு ஜன் சமாஜ் ஆகியன) நடுவண் அரசால் கணிசமான அளவிற்கு நிதி உதவி பெற்று வருகின்றன என்றும், எனவே இந்தக் கட்சிகள் மேற்கண்ட சட்டத்தின் கீழ் பொது நிறுவனங்களாகக் கருதப்பட வேண்டும்’ என்று மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு கூறுகிறது.


சனநாயக சீர்திருத்த சங்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சுபாஷ் அகர்வால், அனில் பெய்ர்வால் ஆகியோர், காங்கிரஸ், பாஜக உட்பட்ட 6 அரசியல் கட்சிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நன்கொடையாகப் பெற்ற தொகை, வழங்கியவர்களின் விபரங்கள் உள்ளிட்ட விவரங்களை வழங்குமாறு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் அரசியல் கட்சிகள் உள்ளடங்காது எனக் கூறி, 6 கட்சிகளும் தகவல் தர மறுத்திருந்தன. இதனை அடுத்து அகர்வால், பெய்ர்வால் ஆகியோர் மத்திய தகவல் ஆணையத்தில் இது குறித்து விளக்கம் கேட்டனர். தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த் மிசுரா, தகவல் ஆணையர் எம். எல். சர்மா, அன்னபூர்ணா தீட்சித் ஆகியோர் அடங்கிய அமர்வு இக்கோரிக்கையை விசாரித்து, தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கு அரசியல் கட்சிகள் கட்டுப்பட்டவையே என உத்தரவிட்டுள்ளது.


மூலம்[தொகு]