இந்தோனேசியாவில் தொடருந்து விபத்தில் 35 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 2, 2010

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெமலாங்கு என்ற நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளுக்கு இடையே சிக்குண்டவர்கள் பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.


இன்று சனிக்கிழமை அதிகாலை 03:00 மணியளவில் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து சுரபாயா நோக்கிச் சென்ற விரைவு வண்டி ஒன்று தரித்து நின்ற வேறொரு வண்டியுடன் மோதிய போதே இவ்விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமிக்கைத் தவறே காரணமாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.


மோதலின் போது மூன்று பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததாகவும் அவற்றில் இருந்தவர்களே இறந்துள்ளனர் என்று பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். குறைந்தது 40 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.


இதற்கிடையில் மேலும் ஒரு தொடருந்து விபத்து சோலோ என்ற நகரில் இடம்பெற்றுள்ளதாகவும், ஒருவர் அவ்விபத்தில் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


கடந்த ஜூன் மாதத்தில் ஜாவாவில் இடம்பெற்ற ஒரு தொடருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

மூலம்