இரண்டாம் உலகப் போர்க்கால பெரும் இனவழிப்புப் புதைகுழி ருமேனியாவில் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 7, 2010

பெரும் இன அழிப்பின் போது கொல்லப்பட்ட கிட்டத்தட்ட 100 யூதர்களின் எச்சங்கள் ருமேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


தலைநகர் புக்கரெஸ்டில் இருந்து 350 கிமீ வடகிழக்கே உள்ள காட்டுப் பகுதியில் பொப்பொரிக்கானி என்ற கிராமத்தில் இந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூன் 1941 ஆம் ஆண்டில் வடகிழக்கு நகரான இயாசியில் நாசி ஆதரவு ருமேனிய ஆட்சியாளர்களால் கொல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகளின் எச்சங்களாக இவை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


இரண்டாம் உலகப் போரின் போது ருமேனியாவின் ஆட்சிப் பகுதியில் மட்டும் மார்ஷல் இயன் அண்டெனெஸ்குவின் ஆட்சிக் காலத்தில் 280,000 யூதர்களும் 11,000 ரோமா மக்களும் (ஜிப்சிகள்) படுகொலை செய்யப்பட்டனர். இன்று ருமேனியாவில் 6,000 யூதர்களே வசிக்கின்றனர்.


"16 உடல்களை நாம் தோண்டி எடுத்திருக்கிறோம். ஆனால் இது ஆரம்பமே, புதைகுழி மிகவும் ஆழமானது," என ஆய்வில் பங்குபற்றிய ருமேனிய தொல்லியலாளர் ஏட்ரியன் சியோபிளாங்கா கூறினார்.


1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்படியான பெரும் இனவழிப்புப் புதைகுழி ருமேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது தடவையாகும்.


மூலம்