செக் குடியரசில் ரோமா மக்களுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 25, 2013

ரோமா இன மக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் செக் குடியரசின் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை எறிந்து வன்முறைகளில் ஈடுபட்டதை அடுத்து அவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். 75 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.


ரோமா இனத்தவருக்கு எதிராக நடத்தப்படவிருந்த இந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து பன்னாட்டு மன்னிப்பகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. ரோமா மக்களைப் பாதுகாக்குமாறு அரசை மன்னிப்பகம் கேட்டிருந்தது.


செக் சமூகத்தில் ரோமா மக்களே மிகவும் வறுமையானவர்கள். 250,000 முதல் 300,000 ரோமா இனத்தவர்கள் இங்கு வாழ்கின்றனர். தமது இனத்தவர் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக ரோமா இனத் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


ரோமா இனத்தவருக்கு ஆதரவு தெரிவித்து மனித உரிமை ஆர்வலர்களும் தலைநகர் பிராகில் ஊர்வலங்களை நடத்தினர்.


2010 ஆம் ஆண்டில், வித்கோவ் நகரில் ரோமா இனத்துக் குடும்பம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் சிறு குழந்தை ஒன்று பலத்த எரிகாயங்களுக்கு உள்ளானது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]