சௌதி அரேபியா ஏமனில் மீண்டும் வான் தாக்குதலை தொடங்கியது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 22, 2015

கடந்த செவ்வாய் அன்று ஏமன் கௌதி புரட்சியாளர்கள் மீது நடத்தப்படும் வான் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக கூறிய சௌதி அரேபியா மீண்டும் ஏமனின் கௌதி புரட்சியாளர்கள் மீது வான் தாக்குதலை தொடங்கியது.


ஏமனின் அதிபரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக கடந்த ஒரு மாதமாக நடந்த வான் தாக்குதல்கள் தங்கள் இலக்கை அடைந்ததால் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதாக சௌதி அரேபியா கூறியது.


வான் தாக்குதல்களாலும் உள்நாட்டு சண்டையாலும் மார்ச்சு 19 முதல் இதுவரை 944 பேர் இறந்துள்ளதாகவும் 3,487 பேர் காயமுற்றதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.


புரட்சியாளர்கள் தாய்ச் நகரின் வடபகுதியில் உள்ள 35வது படைப்பிரிவின் தலைமையகத்தை புதன் அதிகாலையில் கைப்பற்றினர். 35வது படைப்பிரிவு அதிபர் கைய்தியின் ஆதரவு படையாகும். இப்படைப்பிரிவு புரட்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்து சௌதி அரேபியா மீண்டும் வான் தாக்குதலை தொடங்கியது.


தாய்ச் நகர் ஏமனின் மூன்றாவது பெரிய நகராகும். சௌதி அரேபியாவும் அதன் கூட்டாளிகளான ஒன்பது நாடுகளும் சுன்னி இசுலாம் பிரிவை சார்ந்தவை. ஏமனின் புரட்சியாளர்களான கௌதிகள் சியா பிரிவை சார்ந்தவர்கள். இவர்களுக்கு சியா நாடான ஈரான் ஆதரவு அளிப்பதாக சுன்னி நாடுகள் ஐயுறுகின்றன. கௌதிகள் ஏமனின் ஆட்சியை பிடித்தால் இப்பகுதியில் ஈரானின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று அவை அஞ்சுகின்றன.


மூலம்[தொகு]