தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டமைப்பு உருவானது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 1, 2010


'தமிழ் தேசிய மக்கள் முன்னணி' (TNPF) என்ற பெயரில் புதிய தமிழ் தேசிய அரசியல் அமைப்பொன்றைத் தாம் உருவாக்கியிருப்பதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் யாழ்ப்பாணக் கிளை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ். கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ததேகூ ஆதரவாளர்கள், மறறும் தமிழ் காங்கிரசின் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை வரதராஜன் ஆகியோர் உட்படப் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழர் தாயகம், தமிழ் தேசியம், தமிழர் சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகளுக்கமைய இக்கூட்டமைப்பு செயற்படும் என அறிவிக்கப்படுகிறது,


அத்துடன் இக்கூட்டமைப்பு எதிர்வரு்ம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் கீழ் போட்டியிடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தமது பதவியில் இருந்தும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அடுத்து பொதுச் சபைக் கூட்டம் நடைபெறும்வரை இடைக்காலத் தலைவராக பிரான்சிஸ் வின்சன் டி போலைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மூலம்[தொகு]