துருக்கியில் அரசுக்கு எதிராக இராணுவச் சதி முயற்சி

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 23, 2010

துருக்கியில் அரசாங்கத்துக்கு எதிரான சதி முயற்சியில் இராணுவம் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களுக்காக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திச்சேவைகள் தெரிவிக்கின்றன.


இஸ்தான்புல், அங்காரா போன்ற நகரங்களில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கைகளில் தற்போது இராணுவத்தில் பணியாற்றிவரும் 14 அதிகாரிகளும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகளும், கடற்படையின் முன்னாள் தலைவர், வான்படையின் முன்னாள் தலைவர் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.


மசூதிகளில் குண்டு வெடிப்பை நடத்தி இராணுவ விமானங்களில் விமானங்களை மோதி வெடிக்கச் செய்து நாட்டில் குழப்பத்தை உருவாக்க இவர்கள் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 2003 ஆம் ஆண்டில் இருந்து இருநூறுக்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இக்குற்றச்சாட்டை இராணுவத் தலைவர் மறுத்துள்ளார். "இராணுவச் சதித்திட்டங்கள் முந்தைய காலங்களில் தான் நடைபெற்றுள்ளன. தற்போது அப்படி எதுவும் இல்லை," என அவர் தெரிவித்தார்.


1960 முதல் நான்கு முறை இராணுவப் புரட்சிகளில் அரசாங்கங்கள் கலைக்கப்பட்டுள்ளன. கடைசியாக 1997 ஆம் ஆண்டில் அரசு கலைக்கப்பட்டது.


இப்படியான குற்றச்சாட்டுகளை கூறி அரசாங்கம் தமது எதிர்ப்பாளர்களை துன்புறுத்திவருகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மூலம்