நாசாவின் 'மாவென்' விண்கலம் செவ்வாய்க் கோள் நோக்கி சென்றது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 19, 2013

அமெரிக்காவின் மாவென் என்ற புதிய விண்கலம் ஒன்று புளோரிடாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் 13:28 மணிக்கு அட்லசு V ஏவுகலன் மூலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.


மாவென் விண்கலம்

671 மில்லியன் டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் எவ்வித இடர்ப்பாடும் இன்றி செல்லும் பட்சத்தில், 10 மாதங்களில் 2014 செப்டம்பர் 22 இல் செவ்வாயை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மாவென் விண்கலம் செவ்வாயின் மேல் வளிமண்டலத்தை ஆராயும். இதன் மூலம் வளிமண்டலத்தில் உள்ள வளிமத்தின் இழப்பு எவ்வாறு செவ்வாய்க் கோளின் காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்றைய மெலிதான செவ்வாயின் வளிமண்டலத்தில் பெருமளவு கார்பனீரொக்சைட்டு காணப்படுகிறது. மேற்பரப்பு வளிமண்டல அமுக்கம் பூமியினதை விட 0.6% ஆகும்.


இந்தியா தனது மங்கள்யான் விண்கலத்தை நவம்பர் 5 இல் செவ்வாயை நோக்கி ஏவியது. ஆனாலும், மங்கள்யானை விட மாவென் சில நாட்கள் முன்கூட்டியே செவ்வாயைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசா தற்போது செவ்வாய் முன்னீட்டாய்வு சுற்றுக்கலன், ஸ்பிரிட், ஒப்போர்ச்சுனிட்டி, கியூரியோசிட்டி ஆகிய திட்டங்களை செவ்வாயில் முன்னெடுத்து வருகிறது. இவை அனைத்தும் அக்கோளின் மேற்பரப்பை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டவையாகும்.


மூலம்[தொகு]