பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 9 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 5, 2010


பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய வடமேற்கு மாநிலத்தில் உள்ள டிர் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் 4 பாடசாலை மாணவிகள், மூன்று அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 9 பேர் உயிரிழந்தார்கள். மற்றும் 70 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 41 பேர் மாணவிகள் ஆவார்கள். 4 பாகிஸ்தான் நிருபர்களும், 5 இராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர்.


தாலிபான்கள் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கிறார்கள். இக்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தாங்கள் 35 பேரை தடுத்து வைத்துள்ளதாக பாகிஸ்தானின் காவல்துறை தெரிவித்துள்ளது.


தமது பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானின் துணை இராணுவப் படையினருக்கு பயிற்சி அளித்து வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.


அமெரிக்கர்கள் பயணித்துக் கொண்டிருந்த அந்த வாகனம் குறிப்பாக திட்டமிட்டு குண்டுதாரியால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.


இந்த வாகனத்தின் பயணம் குறித்த தகவல்கள் முன்னரே கசிந்ததா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

மூலம்