பிலிப்பைன்சைத் தாக்கிய 'மெகி' புயல் சீனாவை நோக்கி நகருகிறது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 19, 2010

நேற்று திங்கட்கிழமை பிலிப்பைன்சின் வடக்குப் பகுதியைத் தாக்கிய மெகி என்ற பெரும் புயலினால் அங்கு குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கு கன மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. புயல்காற்று மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் புயல் காற்றினால் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மெகி புயலின் பாதை

உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட இடங்களுடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் முழுமையான சேதவிபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.


கடந்த 4 ஆண்டுகளில் பிலிப்பைன்சைத் தாக்கிய பெரும் புயல் இந்த மெகி புயல் எனக் கூறப்படுகிறது. புயல்காற்றுக்கு அஞ்சி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.


லூசோன் என்ற முக்கிய தீவைத் தாக்கிய மெகி புயல் சீனாவின் தெற்குக் கரையோரமாக நகருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


2006-ம் ஆண்டு கடும் புயல் பிலிப்பைன்சைத் தாக்கியபோது ஏற்பட்ட மண் சரிவில் பல கிராமங்கள் புதையுண்டதில் 1,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.


வியட்நாமின் வடக்கு மாகாணமான ரட்சாசிமாவில் பெரும் வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. குறைந்தது 31 பேர் உயிரிழந்ததாகவும் 23 பேரைக் காணவில்லை எனவும் கூறப்படுகிறது.


ஐநான் என்ற தெற்குச் சீனத் தீவில் ஒரு இலட்சம் பேர் தமது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துள்ளனர்.


மூலம்

[[பகுப்பு:பிலிப்பைன்ஸ்}}