பீகாரில் பள்ளிக்கூடம் வெடி வைத்து தகர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 28, 2009


இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மாவோயிய கிளர்ச்சிகாரர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் அரசாங்கப் பள்ளிக்கூடக் கட்டிடம் ஒன்று வெடி வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அவுரங்காபாத்தில் உள்ள இந்தப் பள்ளிக்கூடத்தை இறுநூறுக்கும் அதிகமான கிளர்ச்சிக்காரர்கள் சூழ்ந்து முற்றுகையிட்டு, பின்னர் அதனை டைனமைட் வெடிவைத்து தகர்த்துள்ளனர்.


இந்தியாவில் பீகார் மாநிலத்தின் அமைவிடம்

பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.


கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் துருப்பினர் இப்படியான பள்ளிக் கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்படுகிறார்கள் என்று மாவோயியவாதிகள் அரசாங்கத்தினரைக் குற்றம்சாட்டுகின்றனர்.


பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் நாற்பது பள்ளிக்கூடங்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


வேறொரு சம்பவத்தில், ஒரிசா மாநிலத்தில் பேருந்துகள், மற்றும் ஒரு மொபைல் தொலபேசிக் கோபுரம் ஆகியவற்றை தீவிரவாதிகள் தாக்கி அழித்துள்ளனர். பாதுகாப்புப் படையினரை அங்கிருந்து வெளியேற வலியுறுத்தியே இத்தாக்குதலை அவர்கள் நடத்தியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


மாவோயியப் போராளிகள் கம்யூனிச ஆட்சியை ஏற்படுத்த பல வட இந்திய மாநிலங்களில் போராடி வருகின்றனர். 20 ஆண்டு கால போராட்டத்தின் விளைவாக இது வரையில் 6,000 பேர் வாரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

மூலம்[தொகு]