போலந்தில் அரசு-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டெம்பர் 15, 2013

போலந்து அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய தொழில் சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் கடந்த நான்கு நாட்களாக தலைநகர் வார்சாவாவில் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


மிகக்குறைந்த சம்பளத்தை அதிகரித்தல், அதிகரித்த தொழில் பாதுகாப்பு, மற்றும் இளைப்பாறும் வயதை 67 ஆக அதிகரித்திருப்பதற்கு எதிர்ப்பு போன்றவை ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்பட்டக் கோரிக்கைகளாகும். பிரதமர் டொனால்ட் டஸ்க் உடனடியாகப் பதவி துறக்க வேண்டும் என அவர்கள் கோரினர். இவ்வார்ப்பாட்டத்தில் பல தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். கடந்த பல ஆண்டுகளில் இடம்பெற்ற மிகப் பெரும் எதிர்ப்புப் போராட்டம் இதுவெனக் கூறப்படுகிறது.


இவ்வார்ப்பாட்டங்களில் சுமார் 120,000 பேர் வரை பங்குபற்றியதாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.


2007 ஆம் ஆண்டில் டொனால்ட் டஸ்க் பதவியேற்றதில் இருந்து வலதுசாரி கூட்டணியின் செல்வாக்கு அங்கு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அண்மைக்காலப் பொருளாதாரத் தேக்கத்தில் பாதிக்காத ஒரே ஒரு நாடு போலந்து ஆகும். ஆனாலும், தமது நாடு ஏனைய சில ஐரோப்பிய நாடுகளை விட பொருளாதாரத்தில் பின்தங்கியே உள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.


மூலம்[தொகு]