மேற்கு ஐரோப்பாவில் புயல், 50 பேருக்கு மேல் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 1, 2010


மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தாக்கிய புயலில் சிக்கி குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாக பிபிசி அறிவித்துள்ளது.


சிந்தியா புயலினால் விளைந்த அழிவுகள்

பிரான்ஸ் "தேசியப் பேரழிவை" அறிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மற்றும் மீள்குடியேற்றங்களுக்கு இந்தப் பிரகடனம் வழிவகுக்கும் என பிரான்சின் பிரதமர் பிரான்சுவா பிலியன் கருத்துத் தெரிவித்தார்.


புயலினால் பெரும் பாதிப்புக்குள்ளான அத்திலாந்திக் கரையோரப் பகுதிகளை பிரெஞ்சு அதிபர் பார்வையிட இருக்கிறார். இப்பகுதியில் 45 பேர் உயிரிழந்தனர்.


பலர் வெள்ளத்தில் மூழ்கியோ அல்லது இடிபாடுகள், மற்றும் மரங்களுக்கிடையில் சிக்குண்டு இறந்தார்கள்.


சிந்தியா என்று பெயரிடப்பட்ட அத்திலாந்திக் புயல் பிரான்ஸ், போர்த்துக்கல், மற்றும் ஸ்பெயினின் மேற்குக் கரைகளை 140 கீமீ/மணி வேகத்தில் தாக்கியது. அத்துடன் பெரும் மழையும் கூடவே பெய்தது.


பிரான்சில் மின்சார கம்பிகள் சேதமடைந்துள்ளதால் அங்கு மில்லியன் கணக்கானோர் மின்சாரமின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


இந்த சீரற்ற காலநிலை காரணமாக பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாலும் ரயில்கள் தாமதமானதாலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]