மேற்கு வங்காளத்தில் சூறாவளி, 60 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 14, 2010


இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் வங்காளதேசத்துடனான எல்லைப் பகுதியில் நேற்றிரவு தாக்கிய கடும் சூறாவளியினால் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேற்கு வங்க மாநிலம்

மாநிலத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்திலேயே பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மாநில பாதுகாப்புத்துறை அமைச்சர் சிறீகுமார் முக்கர்ஜி இன்று சேதமடைந்த பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.


50,000 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாக ம்திப்பிடப்பட்டுள்ளது. “வீடுகளின் இடிபாடுகளுக்கிடையே இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன,” என திரு முக்கர்ஜி பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


நூற்றுக்கணக்கானோர் கடும் காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


சூறாவழியுடன் சேர்ந்து பெரும் மழையும் பொழியத் தொடங்கியதாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்கம்பிகளின் மேல் மரங்கள் வீழ்ந்து அவை அறுந்து போயுள்ளன.


எல்லைக்கப்பால் வங்காளதேசத்தில் ராங்பூர் பிரதேசத்தில் வீசிய சூறாவளியில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மிகக்கடுமையான வெப்பக்காலத்தில் இப்படியான சூறாவளிகள் வங்காள விரிகுடாப் பகுதிகளில் இடம்பெறுவது வழமையாகும்.


சென்ற ஆண்டு மே மாதத்தில் ஐலா என்ற சூறாவளி இப்பகுதியில் தாக்கியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.


தற்போது இந்தியாவின் 29 மாநிலங்களில் வெப்பஅலை வீசுவதாகவும், வடக்கு இந்தியப் பகுதிகளில் 40C இற்கும் அதிகமாக வெப்பநிலை காட்டுவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவ்வெப்பவலையின் தாக்கம் இலங்கை வரை உணரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்[தொகு]