ரஷ்யாவில் குண்டுத்தாக்குதலில் சிக்கிய தொடருந்து தடம் புரண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 29, 2009

ரஷ்யாவில் வெள்ளி இரவு மாஸ்கோவுக்கும் சென் பீட்டர்ஸ்பர்க் நகருக்கும் இடையில் சென்றுகொண்டிருந்த விரைவு தொடருந்து தடம்புரண்ட நிகழ்வில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டும் நூறு பேர் வரையிலானோர் காயமடைந்தும் உள்ளனர். இத்தொடருந்து தடம் புரளக் காரணம் குண்டுவெடிப்புதான் என்று அந்நாட்டின் உள்நாட்டு உளவுத்துறையான எஃப்.எஸ்.பி. கூறுகிறது.


இரசியாவின் வரைபடத்தில் துவெர் ஓப்லஸ்து

இந்நிகழ்வு துவெர் மாநிலத்தில் பலகோயெ என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. நியெவ்ஸ்கி கடுகதி என்ற இத்தொடருந்தில் கிட்டத்தட்ட 650 பேர் பயணித்திருந்தனர்.


மோதலுக்கு முன்னர் ஒரு பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக பயணிகள் தெரிவித்தனர். "ரயிலுக்கு அடியில் வெடிப்பொன்று நிகழ்ந்ததாக" ரயிலின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். தண்டவாளத்துக்கு அருகில் பள்ளமும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 7 கிலோ டி.என்.டி. குண்டுக்கு ஒப்பான நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ரஷ்ய உள்நாட்டு உளவு நிறுவனத் தலைவர் அலெக்ஸாந்தர் போர்ட்னிகோவ் கூறியுள்ளார்.


2007 ஆம் ஆண்டில் இதே பாதையில் இரண்டு செச்சினியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 27 பேர் காயமடைந்தனர்.

மூலம்[தொகு]