லிபியத் தலைவர் கடாபிக்கு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்தது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 27, 2011

லிபியத் தலைவர் முஅம்மர் கதாஃபிக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கைதாணை பிறப்பித்துள்ளது.


லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி

மனித குலத்துக்கு எதிராகக் குற்றங்கள் புரிந்தமை, பொதுமக்களைத் தாக்குவதற்கு உத்தரவு பிறப்பித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் கடாபி மீது சுமத்தப்பட்டுள்ளன. கடாபியின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் ஆரம்பமாயின. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் கடாபியுடன் அவரது இரண்டு உதவியாளர்களான, கடாபியின் மகன் சாயிஃப் அல்-இசுலாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல்-சனூசி ஆகியோருக்கும் கைதாணை பிறப்பித்தது.


கைதாணை பிறப்பிக்குமாறு கடந்த மே மாதத்தில் ஐசிசி வழக்குத் தொடுநர் லூயிஸ் மொரேனோ-ஒக்காம்போ கேட்டுக் கொண்டார். "இம்மூவரும் பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களுக்கு கரணகர்த்தாக்களாவர்," என அவர் தெரிவித்தார்.


பன்னாட்டு நீதிமன்றத்தைத் தாம் அங்கீகரிக்கவில்லை என்றும், கைதானைகளுக்குத் தாம் பதிலளிக்கப்போவதில்லை எனவும் லிபியா முன்னர் கூறியிருந்தது.


மூலம்[தொகு]