செப்டம்பர் 11இல் குர்-ஆன் எரிப்பு: அமெரிக்க கிறித்தவ குழுவின் அச்சுறுத்தல்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்டம்பர் 7, 2010

நியூயார்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையக் கோபுரங்கள் சாய்க்கப்பட்ட 9ஆம் ஆண்டு நெருங்கிவரும் வேளையில் (செப்டம்பர் 11, 2010) திருக்குர்-ஆன் நூல் எரிக்கப்படும் என்று அமெரிக்க கிறித்தவ குழுவொன்று அச்சுறுத்தியுள்ளது.


இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஆப்கானிசுதான் தலைநகராகிய காபூலிலும் மற்றும் இந்தோனேசியாவிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன.


நேற்று காபூலில் நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டத்தின்போது சுமார் 500 பேர், "இசுலாம் வாழ்க, அமெரிக்கா வீழ்க" என்று குரல் எழுப்பியதோடு, டெரி ஜோன்சு என்பவரின் உருவத்தையும் தீக்கிரையாக்கினர். இவர் பாதிரியாராகப் பணிபுரியும் "டவ் உலக நற்பணி மையம்" (Dove World Outreach Center) என்னும் கிறித்தவ குழுதான் குர்-ஆன் எரிப்பு நிகழ்த்தப் போவதாக அச்சுறுத்தியது.


அமெரிக்காவின் தென்பகுதியிலுள்ள புளோரிடா மாநிலத்தில் கெயின்சுவில் (Gainsville) நகரில் 50 பேர்களை மட்டுமே உறுப்பினராகக் கொண்ட இக்குழுவின் தீவிரப் போக்கைக் கண்டனம் செய்து, காபூலில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை விடுத்துள்ளது.


அதுபோலவே, ஆப்கானிசுதானில் அமெரிக்க தலைமைத் தளபதியாகச் செயல்படும் டேவிட் பெட்ரேயசும் அறிக்கை விடுத்துள்ளார். அதில், "குர்-ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டால் அமெரிக்க போர்வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். தலிபான் அமைப்பு இச்செயலைப் பயன்படுத்திக்கொண்டு காபூலில் மட்டுமன்றி உலகின் வேறு பகுதிகளிலும் பிரச்சினை கிளப்பக்கூடும்" என்று கூறியுள்ளார்.


வடக்கு அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு (NATO) துணைத்தலைவர் வில்லியம் கால்ட்வெல் விடுத்த அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்: "குர்-ஆன் முசுலிம்களின் மிகப் புனித நூல். அதற்குச் சேதம் விளைவித்து அதன் புனிதத்தைக் கெடுக்கப்போவதாக யாராவது கூறினால் அதன் விளைவுகள் மிக மோசமாக மாறிவிடும்."

மசூதி சர்ச்சை

இந்தச் சர்ச்சை எழுவதற்கு முன் நியூயார்க் நகரில் மசூதி கட்டுவது பற்றி விவாதம் எழுந்தது தெரிந்ததே. அங்கே, முன்னாள் உலக வர்த்தக மையக் கோபுரங்கள் நின்றிருந்த தளத்திலிருந்து (Ground Zero) இரு தெருக்கள் தாண்டி ஒரு மசூதியை உள்ளடக்கிய இசுலாமிய கலைக் கூடம் கட்டும் திட்டத்தை எதிர்த்து பலர் குரலெழுப்பினர்.


இப்பின்னணியில் கெயின்சுவில் கிறித்தவக் குழுவின் குர்-ஆன் எரிப்புத் திட்டம் தீய விளைவுகளுக்குத் தூண்டுதலாக அமைந்துவிடும் ஆபத்து எழுந்துள்ளது.


ஆப்கானிசுதானிலும் ஈராக்கிலும் அமெரிக்க போர்வீரர்கள் திருக்குர்-ஆனை இழிவுபடுத்தினர் என்னும் வதந்தி பரவியபோது சில இடங்களில் கலவரம் வெடித்தது நினைவிருக்கலாம். ஈராக்குக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க போர்வீரர் ஒருவர் குர்-ஆன் நூலில் குண்டுகளைப் பாய்ச்சியதைத் தொடர்ந்து ஆப்கானிசுதானில் 2008இல் நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தோரும் உண்டு.


அதுபோலவே, குவான்டானமோ வளைகுடாவில் அமெரிக்க விசாரணை அதிகாரிகள் குர்-ஆன் பிரதியைக் கழிவறைத் தொட்டியில் வீசி இழிவுபடுத்தினர் என்று குற்றம் சாட்டி நியூசுவீக் வார இதழ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தும் 2005இல் கடும் எதிர்ப்பு எழுந்தது. இச்செய்தி உண்மையல்ல என்று தெரியவந்ததும் நியூசுவீக் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

மூலம்[தொகு]