இந்தியாவில் மணிக்கு 15 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு தெரிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 29, 2011

இந்தியாவில் மணிக்கு 15 பேர் என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு 368 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்வதாக இந்திய மத்திய அரசின் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்ட விபரங்கள் கூறுகின்றன.


தற்கொலை செய்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 45 சதவீதத்தினர் தூக்குப் போட்டுக் கொண்டும் அதற்கு அடுத்து நஞ்சருந்தி 20 சதவீதம் பேரும் தம்மை மாய்த்துக் கொண்டுள்ளனர்.


இந்தியாவில் நடக்கும் குற்றச்சம்பவங்கள், விபத்துகள் குறித்த தகவல்கள் தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் மூலம் சேகரிப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த அறிக்கையை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டார். அந்த அறிக்கையின் படி கடந்த ஆண்டில் (2010) இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். அதில் சுமார் 70.5 சதவீதம் பேர் திருமணமான ஆண்கள், 67 சதவீதம் பேர் திருமணமான பெண்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேச மாநிலங்களில் 60 வயதை கடந்த பலர் தற்கொலை செய்கிறார்கள். கடந்த ஆண்டு 60 சதவீதம் பேர் முதுமை காரணமாக தற்கொலை செய்துள்ளனர்.


தற்கொலையில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 16,561 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் 2009ம் ஆண்டு 14,424 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2009ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2010ல் கூடுதலாக 14.8 சதவீதம் பேர் தற்கொலை செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள 35 பெரு நகரங்களில் பெருநகரங்களைப் பொறுத்தவரை, பெங்களூரில் அதிக அளவாக 1778 பேரும், அதற்கு அடுத்ததாக சென்னையில் 1,325 பேரும் டெல்லியில் 1,242 பேரும், மும்பையில் 1,192 பேரும் கடந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக ஆண்கள் அதிக அளவிலும் தனிப்பட்ட உணர்வு ரீதியான விடயங்களுக்காக பெண்கள் அதிக அளவிலும் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.


மூலம்[தொகு]