சிங்கப்பூர் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் நைஜீரியாவில் கடத்தப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்தெம்பர் 5, 2012

சிங்கப்பூருக்குச் சொந்தமான எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்று நைஜீரியக் கரைக்கப்பால் கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக நைஜீரியக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கப்பல் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதென்று உடனடியாகத் தெரியவில்லை எனக் கடற்படை அதிகாரி ஜெரி ஒமடாரா தெரிவித்தார். கப்பலில் 23 பணியாளர்கள் இருந்தனர் என்றும், அவர்கள் பாதுகாப்புக்காக அறை ஒன்றினுள் சென்று அறையைப் பூட்டியுள்ளதாக பன்னாட்டு கடல்வழிப் பணியகம் தெரிவித்துள்ளது. லேகோசுத் துறைமுகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலையில் இக்கடத்தல் இடம்பெற்றுள்ளது.


மேற்கு ஆப்பிரிக்காவில் கப்பல் கொள்ளைகள் அண்மைக்காலத்தில் அதிகரித்துக் காணப்படுவதாக அவதானிகள் கூறுகின்றனர். நைஜீரியாவில் மட்டும் இவ்வாண்டு 17 கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன.


இதே வேளையில், ஏடன் வளைகுடாவில் கடற் கொள்ளைகளைத் தடுக்கும் பன்னாடுகளின் முயற்சிகளுக்கு ஆதரவாக சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் நான்காவது குழு நேற்றுப் புறப்பட்டது. மூன்று மாதப் பணியில் 145 பேர் அடங்கிய குழு ஈடுபடும். சோமாலியாவுக்கு அருகே கடற் கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட கடற்பகுதிக்கு சிங்கப்பூர் கடற்படையின் நவீன விமானங்களும் உலங்குவானூர்திகளும் அனுப்பப்படுகின்றன.


மூலம்[தொகு]