மாலி சோதனைச் சாவடியில் இராணுவம் துப்பாக்கிச் சூடு, 16 இசுலாமிய அறவுரையாளர்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 10, 2012

மாலியின் மத்திய சேகு பகுதியில் டயாபெலி என்னும் நகரில் சோதனைச் சாவடி ஒன்றில் நிற்காமல் பயணம் செய்த வாகனம் ஒன்றை இராணுவத்தினர் சுட்டதில் 16 பேர் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.


இந்த வாகனத்தில் பயணம் செய்தோரில் பெரும்பான்மையானோர் தாவா என்ற மிதவாத இசுலாமிய அறவுரையாளர்கள் எனவும் ஏனையோர் மாலி, மற்றும் மவுரித்தானியர் எனவும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் இசுலாமிய மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தலைநகர் நோக்கிப் பயணித்தவர்கள் ஆவர்.


மாலியின் வடக்குப் பகுதி தற்போது இசுலாமியப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. வாகனத்தில் பயணம் செய்தவர்கள் தீவிரவாதிகள் என இராணுவத்தினர் தவறுதலாகக் கணித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.


பாக்கித்தானில் ஆரம்பிக்கப்பட்ட தாவா மதக்குழு மாலிக்கு 1990களில் பரவியது.


மூலம்[தொகு]