இலங்கை இந்திய மீனவர்களிற்கிடையேயான சந்திப்பு ஒத்திவைப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 19, 2014

நாளை சென்னை, இந்தியாவில் நடைபெற இருந்த இலங்கை இந்திய மீனவர்களிற்கிடையேயான சந்திப்பு மேலும் ஒரு வாரகாலம் தாமதப்படுத்தி 27, சனவரி 2014 அன்று நடைபெறும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அறிவித்துள்ளார். இலங்கைத் தரப்பு மீனவர்கள் கலந்துகொள்வதில் ஏற்படும் காலதாமதத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தமிழக அரசிற்கு அறிவித்துள்ளதாகவும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்னிந்திய மீன்பிடிப்படகு

ஏற்கனவே 20ம் திகதி மீனவர்களிற்கிடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுவது பற்றி தனக்கு யாரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் தானும் பத்திரிகை வாயிலாகவே இந்தத்தகவல்கள் பற்றி அறிந்தேன் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்திருந்தார். மேலும் இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு முக்கியமான தடைக்கல்லாக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவையும் குற்றம் சாட்டியுள்ளார். 27ம் திகதி இலங்கை மீனவர்கள் 20 பேர் கொண்ட குழு ஒன்றை பேச்சுவார்த்தைக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாகவும் ராஜிதசேனாரத்ன கூறியுள்ளதாக அவரின் ஆலோசகர் எஸ்.பி.அந்தோனிமுத்து அறிவித்துள்ளார்.


மேலும் தமிழக அரசின் அறிக்கையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் முயற்சியில் பேரில் 179 இலங்கை மீனவர்களில் சுமார் 113 மீனவர்கள் தமிழகச் சிறையில் இருந்தும், மற்றும் தமிழகம், புதிச்சேரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 179 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]