அமெரிக்காவின் மிசூரியில் சூறாவளி, 30 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மே 23, 2011

ஐக்கிய அமெரிக்காவின் மத்திய மாநிலமான மிசூரியில் ஜொப்ளின் நகரை சூராவளி தாக்கியதில் குறைந்தது 30 பேர் வரையில் கொல்லப்பட்டனர். நகரின் பெரும்பாலான பகுதிகள் சூறாவளியினால் சேதமடைந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மிசூரி மாநிலம்

அவசரகால நிலையைப் பிறப்பித்துள்ள மாநகர ஆளுநர் ஜேய் நிக்சன், மேலும் சூறாவளிகள் தாக்கலாம் என எச்சரித்துள்ளார்.


நேற்றைய சூறாவளியின் தாக்கத்தினால் மின்சாரம், மற்றும் தொலைத்தொடர்புகள் ஜொப்ளின் நகரில் துண்டிக்கப்பட்டுள்ளன. வால்மார்ட் பல்பொருள் அங்காடி இருக்கும் தெருவில் முதலுதவி வண்டிகள் பல நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு நூற்றுக்கணக்கானோர் சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


சென் ஜோன்ஸ் மருத்துவமனையும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீசப்பட்ட பல மருத்துவ உபகரணங்கள் பல மைல் தூரத்துக்கு அப்பால் வீழ்ந்திருக்கக் காணப்பட்டன.


கடந்த மாதம் அலபாமாவிலும் மேலும் ஆறு தெற்கு மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 350 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]