உருசியா, கிராஸ்னதார் பகுதியில் பெரும் வெள்ளம், 144 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 8, 2012

உருசியாவின் தெற்கே கிராஸ்னதார் பிரதேசம் பெரும் வெள்ளத்தால் மூழ்கியதில் குறைந்தது 144 பேர் உயிரிழந்தனர் என உருசிய உட்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.


உருசியாவில் கிராஸ்னதார் பிரதேசம்

பல தசாப்தங்களின் பின்னர் உருசியாவில் இவ்வாறான பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல நகரங்கள், மற்றும் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. கிராஸ்னதார் பிரதேசத்தில் கெண்ட்சிக், நோவரசீஸ்க், கிரீம்ஸ்க் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


கிராஸ்னதார் நகரில் இருந்து 87 கிமீ தொலைவில் உள்ள கிரீம்ஸ்க் மாவட்டத்தில் 150 சிறுவர்கள் உட்பட 300 பேர் வரையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், அங்கு காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் வெள்ளி இரவு பெரும்பாலானோர் தூக்கத்தில் இருந்த போது வெள்ளம் தாக்கியது.


2002 ஆம் ஆண்டில் சனவரி மாதத்தில் கிராஸ்னதார் பிரதேசத்தில் வழமைக்கு மாறான சூடான குளிர்காலத்தில் வெள்ளம் தாக்கியதில் 60 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]