ஈரானில் இடம்பெற்ற தாக்குதலில் காவல் படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 18, 2009, ஈரான்:


ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் நடந்துள்ள ஒரு தாக்குதலில் கிட்டத்தட்ட முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானிய புரட்சிக் காவல் படையின் தளபதிகள் பலர், மூத்த பழங்குடியினத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.


பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் புரட்சிக் காவல் படையினர் பழங்குடியனத் தலைவர்கள் இடையே நடந்த கூட்டத்தை இலக்குவைத்து குண்டுதாரி ஒருவரோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களோ தாக்குதலை நடத்தியுள்ளதாக அரச ஊடகங்கள் கூறுகின்றன.


சிஸ்தான்-பலுசிஸ்தான் பிராந்தியத்தில் நீண்டகாலமாக உள்நாட்டுக் கிளர்ச்சி நீடித்துவருகிறது. சுனி ஆயுதக் குழுவான ஜுன்துல்லா இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாக இரான் கூறுகிறது.


இத்தாக்குதலைக் கண்டித்துள்ள அமெரிக்கா, இத்தாக்குதலில் தமக்கு சம்பந்தம் இருப்பதாக கூறும் இரானியத் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், பாகிஸ்தானிய ஏஜண்டுகளே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரானிய அதிபர் மகுமுட் அகுமடுனெசாட் குற்றம் சாட்டியுள்ளார்.

மூலம்