இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு, 25 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 27, 2010

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மெராப்பி எரிமலை வெடித்ததில் உயிரிழப்புகள் 25 ஐத் தாண்டியதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தூசுப் படிவுகள் தற்போது குறைந்து காணப்பட்ட போதிலும், மேலும் வெடிப்புகள் இடம்பெறச் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூறுகின்றனர்.


மெராப்பி எரிமலை
மெராப்பி எரிமலை உள்ள மத்திய ஜாவா

செவ்வாயன்று பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். எரிமலையில் இருந்து கிளம்பிய தூசு நிலமெங்கும் வெண்ணிறமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பலர் வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருவதாகவும், இதனால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாகலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் மீண்டும் தமது வீடுகளை நோக்கி வருவதற்கு எத்தனிப்பதாக அங்கு சென்றுள்ள பிபிசி நிருபர் தெரிவித்தார். பல விவசாயிகள் தமது கால்நடைகளைப் பற்றி கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


பல வீடுகளும் கால்நடைகளும் சூடான முகில் கூட்டங்கள் காரணமாக எரிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிருபர் தெரிவிக்கிறார்.


1930 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் எரிமலை வெடிப்பை அடுத்து 13 கிராமங்கள் அழிந்தன. ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.


மூலம்[தொகு]