யூரோ வலயத்தின் 17வது உறுப்பு நாடாக எசுத்தோனியா இணைந்தது

விக்கிசெய்தி இலிருந்து
எசுத்தோனியாவில் இருந்து ஏனைய செய்திகள்
எசுத்தோனியாவின் அமைவிடம்

எசுத்தோனியாவின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

சனி, சனவரி 1, 2011

எசுத்தோனியா யூரோ வலயத்தின் 17வது உறுப்பு நாடாக இணைந்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ நாணய அலகை ஏற்றுக் கொண்ட முதலாவது முன்னாள் சோவியத் நாடானது.


யூரோ நாணயத் தாள்கள்

1.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த சிறிய பால்ட்டிக் நாடு நேற்று நள்ளிரவில் இருந்து குரூன் என்ற நாணய அலகில் இருந்து யூரோ அலகிற்கு மாறியது. யூரோ வலயத்தின் அழுத்தம், மற்றும் அயர்லாந்து, கிரேக்கம் ஆகியவற்றின் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டாலும், பெரும்பான்மையான எசுத்தோனிய மக்கள் யூரோ அலகிற்கு மாறுவதற்கு விருப்பம் கொண்டிருந்தனர்.


இந்நாளைக் கொண்டாடும் வகையில் எசுத்தோனியப் பிரதமர் ஆண்ட்ரூஸ் ஆன்சிப் தன்னியக்க வங்கி இயந்திரம் ஒன்றில் இருந்து யூரோ நானயங்களைப் பெற்றுக் கொண்டார்.


"யூரோ வலயத்திற்கு இது ஒரு சிறிய படிக்கல், ஆனால் எசுத்தோனியாவிற்கு இது பெரும் படிக்கல்," என அவர் தெரிவித்தார்.


சோவிஅத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து 20 ஆண்டுகளின் பின்னர் எசுத்தோனிய மக்கள் இப்போது தாம் முழுமையாக மேற்குலக நாடுகளுடன் ஒன்றிணைந்ததற்கான சான்றைப் பெற்றுள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


எட்டு முன்னாள் கம்யூனிச நாடுகளுடன் சேர்ந்து எசுத்தோனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் 2004 ஆம் ஆண்டில் இணைந்தது. சுலொவீனியா, சுலொவாக்கியா இரண்டும் ஏற்கனவே யூரோவலயத்தில் சேர்ந்து யூரோவைத் தமது நாணய அலகாக்கிக்கொண்டுள்ளன.


சனவரியின் முதல் அரைப்பகுதி வரை யூரோவுடன் இணைந்து குரூன்களும் ஏற்றுக் கொள்ளப்படும். 2011 இறுதி வரையில் வங்கிகள் குரூன்களை யூரோக்களுக்கு மாற்றிக் கொடுக்கும்.


மூலம்