இந்தோனேசியாவின் லோக்கோன் எரிமலை மீண்டும் வெடித்தது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 28, 2011

இந்தோனேசியாவின் மிகவும் உக்கிரமான எரிமலை எனக் கருதப்படும் லோக்கோன் மலை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் சீறிப் பாய்ந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையில் இருந்து கிளம்பும் தூசுகள் வளி மண்டலத்தை நிரப்பி வருவதால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


லோக்கோன் மலை வெடிப்பு, சூலை 2011

வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள டொமொஹோன் நகரில் உள்ள இரட்டை மலைகளில் ஒன்று லோக்கோன் மலை. இது நேற்று முதல் மூன்று தடவைகள் சீறியுள்ளதாக ஜகார்த்தா போஸ்ட் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.


ஐந்து கிலோமீட்டர்களுக்கு அப்பால் எரிமலை சீறியதைக் கேட்கக்கூடியதாக இருந்ததாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 10,000 பேரடங்கிய இரண்டு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


கடந்த சூலை மாதத்தில் இந்த எரிமலைகள் இரண்டும் வெடித்ததில் 5,000 பேர் வரையில் இடம் பெயர்ந்தனர். 1991 ஆம் ஆண்டில் இந்த எரிமலை வெடித்த போது சுவிஸ் நாட்டுக் குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டார்.


இந்தோனேசியா மற்றும் பல பசிபிக் தீவுகளில் உள்ள எரிமலைகள் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள "பசிபிக் தீ வளையத்தில்" உள்ளன. இது தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதி முதல் வட அமெரிக்கா வரை கிழக்காசியாவூடாகப் பரந்து காணப்படுகிறது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]