சர்ச்சைக்குரிய சியாச்சென் பனியாறு தொடர்பாக பாக்கித்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 11, 2012

சர்ச்சைக்குரிய சியாச்சென் பனியாறு தொடர்பாக இந்திய, பாக்கித்தான் உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் சந்திப்பு ஒன்று பாக்கித்தானின் ராவல்பிண்டி நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.


சியாச்சென் பனியாறின் அமைவிடம்

சியாச்சென் பனியாற்றுப் பகுதிக்கு இரு நாடுகளுமே உரிமை கோரி வருகின்றன. இரு நாடுகளும் இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான படையினரை பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தியுள்ளன.


இரு நாடுகளும் இப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என அண்மையில் பாக்கித்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பெர்வேசு கயானி தெரிவித்திருந்த நிலையில் இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட புயல், மற்றும் பனிச்சரிவினால் 129 பாக்கித்தானிய இராணுவத்தினர் உட்பட 140 பேர் புதையுண்டனர்.


இந்தியத் தரப்புக்கு இந்திய பாதுகாப்புச் செயலர் சசிகாந்த் சர்மா தலைமை தாங்குவார். பாக்கித்தான் தரப்புக்கு அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் நர்கீசு சேதி தலைமை தாங்குவார்.


1947 ஆம் ஆண்டு முதல் காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையே பிரிக்கப்பட்டது. இப்பிராந்தியம் எந்த நாட்டுக்குச் சொந்தமானது என்ற சர்ச்சையில் இரு நாடுகளும் இரு முறை போரில் ஈடுபட்டன


சியாச்சென் பனியாறு உலகின் மிக உயரமான போர்முனை ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 6,700 மீட்டர்கள் உயரத்தில் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதியில் போர் நடவடிக்கைகளையும் விட தீவிரமான காலநிலை காரணமாகவே பெருந்தொகையானோர் இறந்துள்ளனர்.


மூலம்[தொகு]