என்ன அழுத்தம் கொடுத்தாலும் இனி போர் நிறுத்த ஒப்பந்தமே இல்லை: சிறிலங்காப் பிரதமர் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 14, 2008 சிறிலங்காவின் மகிந்த அரசாங்கம் இனி ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது என்று அந்நாட்டின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது:

பல வருடங்களாக புலிகளின் அச்சுறுத்தலுக்கு சிறிலங்கா உள்ளாகியுள்ளது.

இந்த நீண்டகால அச்சுறுத்தலை முழுமையாகத் துடைத்தெறியும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

புலிகள் தோல்வியடையும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அனைத்துலக சக்திகள் மூலமும் உள்நாட்டிலுள்ள சில சக்திகள் மூலமும் அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

தற்காலிக போர் நிறுத்தங்களை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் பாதுகாப்புப் பெற முயற்சிக்கின்றனர்.

எத்தகைய அழுத்தங்கள் வந்த போதிலும் புலிகளுடன் இன்னொரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள மகிந்த அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை.

புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கு இருந்தாலும் போதிலும் நவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் சாதனங்களின் உதவியுடன் அவரைத் தேடியழிக்க அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது.

இந்தப் பணியை எமது படையினர் விரைவில் செய்து முடிப்பார்கள் என்றார் அவர்.