மூதூர் படுகொலைகளில் இலங்கை இராணுவம் சம்பந்தப்படவில்லை - ஜனாதிபதி ஆணைக்குழு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 14, 2009

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூரில் வறுமைக்கு எதிரான அமைப்பு தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலைகளில் இலங்கை படையினருக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கையில் நடந்த 17 மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்த இவ்வாணைக்குழு தனது விசாரணை முழுமை பெறாமலேயே தனது பணியை முடித்துக்கொண்டுள்ளது.

இந்த மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கான சாட்சிகள் பலர் இடம்பெயர்ந்து வெளிநாடு சென்று விட்டதால், அவர்களிடம் இருந்து வீடியோ மூலம் சாட்சிகளை பதிவு செய்வதில் உள்ள பிரச்சினைகளும், இலங்கையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டம் அமலில் இல்லாததாலும், தம்மால் பல விசாரணைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று அந்த ஆணைக்குழுவின் தலைவரான முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நிசங்க உதலாகம தெரிவித்துள்ளார்.

மூதூரில் அக்சன் பெயிம் ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இலங்கை படையினருக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்பதனை விசாரணைகள் கூறுவதாக தெரிவித்த உதலாகம, ஆயினும், அந்த சம்பவத்தில் முஸ்லிம் ஊர்காவற்படையினருக்கு அல்லது விடுதலைப்புலிகளுக்கு சம்பந்தம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை நகர மாணவர்கள் கொலை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை ஆகியவை தொடர்பில் சாட்சிகள் வெளிநாட்டில் இருப்பதுடன், அவர்கள் சாட்சி சொல்லத் தயாராக இருக்கின்ற போதிலும், வீடியோ மூலம் சாட்சிகளை பதிவு செய்வதில் உள்ள தடைகளால் அவற்றை பெறமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் இன்னமும் இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்படாத காரணத்தினால், அதுவும் விசாரணையை பூர்த்தி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

வறுமைக்கு எதிரான அமைப்பு என்ற பிரெஞ்சு தொண்டு நிறுவனம் இலங்கையில் 1996 ஆம் ஆண்டு முதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. போர்க்காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு அவசர மனிதாபிமான உதவிகளையும் வழங்கிவருகின்றது. இச்சேவையில் ஈடுபட்டவர்களில் திருகோணமலை மூதூர் பகுதியில் அலுவலகத்தில் வைத்து அலுவலகச் சீருடையில் இருந்த 15 பணியாளர்களும் ஆகஸ்டு 5, 2006 இல் ஆரம்பப் படுகொலையில் தப்பிய 2 ஊழியர்களையும் தேடிக் கண்டுபிடித்து மொத்தமாகப் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

மூலம்[தொகு]