பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் வெள்ளத்தினால் 900 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 1, 2010

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதில் இடம்பெற்ற வெள்ளம் காரணமாக 900 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 இலடசம் பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 80 ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான வெள்ளம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.


பாகிஸ்தானில் கைபர் பாஹ்துன்குவா மாகாணம்

கைபர் பாஹ்துன்குவா என்ற வடக்கு மாகாணமே அதிகம் பாதிப்படைந்துள்ளது. இன்னும் பல இடங்களை சென்று சேர முடியாமல் இருப்பதாலும், மேலும் மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.


அடுத்த 24 மணி நேரத்தில் இங்கு பருவமழை மேலும் பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் ஐநாவின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் தலைவரான மனுவல் பெசுலர், தன்னால் பாதிப்புகளை முழுமையாக கூறமுடியாத நிலையில் இருப்பதாகவும், ஏனென்றால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் தன்னுடைய அலுவலகங்களையே சென்று சேர முடியாத நிலை இருப்பதாக அவர் கூறியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


கடுமையான காலநிலையினால் மீட்புப் பணிகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக பெஷாவாருக்கும் தலைநகர் இஸ்லாமாபாதிற்கு இடையில் போக்குவரத்துப் பாதை மூடப்பட்டிருந்தது. இன்று அப்பாதை திறக்கப்பட்டு ஓரளவு போக்குவரத்து இடம்பெறுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


இவ்வார ஆரம்பத்தில் கடும் மழை காரணமாக இஸ்லாமாபாதில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 152 பேர் உயிரிழந்தனர்.

மூலம்[தொகு]