காணாமல் போன சைப்பிரசின் முன்னாள் அரசுத்தலைவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 9, 2010

மூன்று மாதங்களுக்கு முன்னர் புதைகுழியில் இருந்த காணாமல் போன சைப்பிரசின் முன்னாள அரசுத்தலைவர் டாசோஸ் பாப்படபவுலசின் இறந்த உடலைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக அந்நாட்டின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


டாசோஸ் பாப்படபவுலஸ்

சைப்பிரஸ் தலைநகர் நிக்கோசியாவின் மயானம் ஒன்றில் முன்னாள் அதிபரின் உடல் கண்டுபிடிக்கபட்டது.


உடனடியாக டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு அவ்வுடல் இறந்த அதிபரினுடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


2003 ஆம் ஆண்டில் இருந்து பெப்ரவரி 2008 ஆம் ஆண்டு வரை சைப்பிரசின் அரசுத்தலைவராக இருந்தவர் பாப்படபவுலஸ். இவரின் உடல் காணமல் போனதற்கு காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.


கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள், அதாவது அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுக்கு ஒரு நால் முன்னதாக இவரது உடல் காணாமல் போனது. இவர் புற்று நோய் காரணமாக இறந்தார்.


மிகவும் திட்டமிட்டு இவ்வுடல் களவாடப்பட்டிருக்கிறது எனக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். 250 கிகி நிறையுள்ள பளிங்கினாலான தட்டினைத் திறந்து உடலைத் திருடியிருக்கின்றனர்.


பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்த சைப்பிரசின் விடுதலைக்காக கரந்தடிப் படைகளுடன் இணைந்து போராடி வெற்றி கண்டவர். தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல எதிரிகளை அவர் தேடிக்கொண்டார்.


இரண்டாகப் பிரிந்த சைப்பிரசை ஒன்றிணைக்க எடுக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் முயற்சியை கிரேக்க சைப்பிரஸ் மக்களுடன் சேர்ந்து எதிர்த்து வந்தவர். சைப்பிரசில் உள்ள துருக்கியர்கள் இணைப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இறுதியில் கிரேக்கப் பகுதி ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தது.

மூலம்