பர்மாவில் கெச்சின் போராளிகளுடன் இராணுவம் போர் நிறுத்தம் அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 19, 2013

பர்மாவின் வடக்கே கெச்சின் மாநிலத்தில் அங்கு போரிட்டு வரும் கெச்சின் போராளிகளுக்கு எதிரான போரை இன்று சனிக்கிழமை காலை 06:00 மணி முதல் முதல் நிறுத்துவதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.


போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் ஆங்காங்கே இராணுவம் குண்டுத்தாக்குதலை நடத்தியிருப்பதாகப் போராளிகள் அறிவித்திருந்தாலும், தற்போது முழுமையாகப் போர் நிறுத்தம் அமுலில் இருப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த 18 மாதங்களாக இராணுவம் தாக்குதல் நடத்தி வருகையில், இராணுவம் அமைதி உடன்பாட்டுக்கு வரும் எனத் தாம் கருதவில்லை என போராளிகள் தெரிவித்திருக்கின்றனர்.


போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அங்கு உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என பர்மிய நாடாளுமன்றம் அறிவித்த சில மணி நேரத்தில் இராணுவம் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது.


கெச்சின் விடுதலை இயக்கம் ஒன்றூபட்ட பர்மாவினுள் கெச்சின் மாநிலத்துக்கு அதிக சுயாட்சி வேண்டுமெனக் கோரிப் போரிட்டு வருகிறது. கெச்சின் போராளிகள் மீதான தாக்குதல்கள் 17 ஆண்டுகள் போர் நிறுத்தத்தின் பின்னர் 2011 ஆம் ஆண்டில் மீள ஆரம்பித்திருந்தது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]