இந்தோனேசிய சுலாவெசித் தீவில் எரிமலை சீறல், மக்கள் வெளியேற்றம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 15, 2011

இந்தோனேசியாவின் சுலாவெசித் தீவில் உள்ள லோக்கோன் எரிமலை சீறத் தொடங்கியதை அடுத்து பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறினர்.


லோக்கோன் எரிமலை சீறல்

நேற்று வியாழக்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்த எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. சேதங்கள் எதுவும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.


1,500 மீட்டர் உயரத்துக்கு தூசு, மணல், மற்றும் கற்கள் வீசப்பட்டதாக அரசுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.


கடந்த மாதம் இப்பகுதியில் எரிமலையின் தாக்கங்கள் மிக அதிகமாகக் காணப்பட்டிருந்தது. 3.5-கிமீ (இரண்டு மைல்) சுற்றுவட்ட மக்கள் வெளியேற்ற வலயம் சென்ற வாரம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பகுதியில் 28,000 பேர் வரை வசிக்கிறார்கள். இவர்களில் 4,400 பேர் ஏற்கனவே வெளியேறியுள்ளனர்.


"நாம் இதனை எதிர்பார்த்து மக்களை எச்சரித்துள்ளோம், இதனால் மக்கள் இது குறித்து பெரிதளவில் பயப்படவில்லை, ஆனாலும், அங்குள்ள மக்களை நாம் தொடர்ந்து வெளியேற்றி வருகிறோம்," என்றார் அரசு பேச்சாளர் கிறிஸ்டியாண்டோ.


1,580 மீட்டர் உயரமான இந்த எரிமலை கடைசியாக 1991 ஆம் ஆண்டு வெடித்தது. இந்தோனேசியாவில் உள்ள உயிருள்ள பல எரிமலைகளில் லோக்கோன் எரிமலை முக்கியமானதாகும்.


மூலம்[தொகு]