ஆங் சான் சூச்சி ஐரோப்பா பயணம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 14, 2012

பர்மாவின் சனநாயக ஆதரவுத் தலைவி ஆங் சான் சூச்சி அம்மையார் ஐரோப்பாவுக்கான தனது முக்கியத்துவமிக்க பயணத்தை நேற்று புதன்கிழமை ஆரம்பித்தார். 1988 ஆம் ஆண்டிற்கு பின் அவர் ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.


சூச்சி அம்மையாரின் இப்பயணம் மியன்மாரில் ஏற்பட்டு வரும் அரசியல் முன்னேற்றத்தின் முக்கிய படிக்கல்லாகக் கருதப்படுகிறது.


இரு வாரப் பயணம் மேற்கொள்ளும் ஆங் சான் சூச்சி பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, பிரான்சு மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார். ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவிருக்கும் பன்னாட்டு தொழிற் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார். 1991 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைதிக்கான நோபல் பரிசை நோர்வேயில் வைத்து அவர் அதிகாரபூர்வமாகப் பெற்றுக் கொள்வார்.


கடந்த 24 ஆண்டுகளில் பெரும்பாலான பகுதியை இவர் பர்மாவில் வீட்டுக் காவலில் கழித்திருந்தார். 2010 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். கடந்த மாதம் அவர் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.


ஆங் சான் சூச்சி பர்மாவின் விடுதலை வீரர் ஆங் சானின் மகள் ஆவார். ஆங் சான் 1947 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்படார்.


மூலம்[தொகு]