இந்திய இராணுவத்தினர் 500 பேர் இலங்கை வருகின்றனர்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 15, 2009 கொழும்பு:


தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு உதவியாக 500 இந்திய இராணுவத்தினர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:


மக்களை வெகுவிரைவில் மீளக் குடியமர்த்தும் நோக்குடன் எமது பாதுகாப்புப் படைப் பிரிவினரும் வெளி நாட்டு நிறுவனங்களும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் அதேசமயம் இவர்களுடன் இணைந்து சேவையாற்றும் வகையிலேயே 500 இந்திய இராணுவ வீரர்களை அனுப்ப இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


கண்ணிவெடி அகற்றும் பணி என்பது மிகவும் இலகுவானதல்ல. காட்டுப் பகுதிகளிலும், சதுப்பு நிலப் பரப்பிலும் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை மிக இலகுவாக அகற்ற முடியாது. எனினும் வெகுவிரைவில் அகற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


அத்துடன் இராணுவத்தில் புதிதாக தமிழ் றெஜிமென்ட் உருவாக்கப்பட மாட்டாது. ஆனால் 800 துணை இராணுவக் குழுவினர் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மூலம்[தொகு]