இந்திய மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து
சத்தீஸ்கரில் இருந்து ஏனைய செய்திகள்
இந்தியாவில் சத்தீஸ்கரின் அமைவிடம்

சத்தீஸ்கரின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

திங்கள், மே 27, 2013

இந்தியாவின் மத்திய பகுதியில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிசப் போராளைகளின் தாக்குதலில் காங்கிரசுக் கட்சித் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.


கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இத்தாக்குதலை அடுத்து சத்தீசுக்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், மற்றும் அவரது மகன் ஆகியோர் கடத்தப்பட்டனர். இவர்களது உடல்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பின்னர் கண்டெடுக்கப்பட்டது.


சுக்மா மாவட்டத்தில் சென்ற காங்கிரஸ் கட்சி வாகன அணி ஒன்றின் மீது கண்ணிவெடித் நடத்தப்பட்டுப் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டது. "இத்தாக்குதல்களில் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்," என காவல்துறை அதிகாரி ராம்னிவாசு தெரிவித்தார். காயமடைந்தவர்களில் முன்னாள் இந்திய நடுவண் அமைச்சர் வித்யா சரண் சுக்லா என்பவரும் அடங்குவார்.


இத்தாக்குதல்களைக் கண்டித்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், "இந்திய மக்களாட்சிக்கு இது ஒரு கருப்பு நாள்" எனத் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் சத்தீஸ்கர் சென்று தாக்குதலுக்கு இலக்கானவர்களை சந்தித்தனர்.


நக்சலைட்டுகள் என அழைக்கப்படும் மாவோயிசவாதிகள் ஏழை மக்களுக்கு நில உரிமையும் வேலை வாய்ப்பும் வேண்டும் எனக்கோரி கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தியாவின் மத்திய, கிழக்கு மாநிலங்களில் ஆயுதமேந்திப் போராடுகின்றனர்.


சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக விளங்குகின்றது.


மூலம்[தொகு]