இந்தோனேசிய இசுலாமிய மதகுரு அபூபக்கர் பசீருக்கு 15 ஆண்டுகால சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 16, 2011

இந்தோனேசியாவின் ஆச்சே பகுதியில் இசுலாமியத் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களுக்கு நிதி திரட்டி உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இசுலாமிய மதகுரு அபூ பக்கர் பசீருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 15 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தலைநகர் ஜகார்த்தாவில் இத்தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.


72 வயதான பசீர் அரசு நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் இசுலாமிய ஆட்சி ஒன்றை நிறுவுவதற்கும் போராளிகளுக்குப் பயிற்சி அளிக்க உதவினார் என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக இவருக்கு போராளிகளுடன் தொடர்பு இருந்து வந்துள்ளதாகக் கூறப்பட்டது. அல்-கைதாவுடன் தொடர்புடைய ஜெமா இஸ்லாமியா என்ற இந்தோனேசியத் தீவிரவாதக் குழுவின் ஆன்மீகத் தலைவராக இவர் கருதப்படுகிறார். இக்குற்றச்சாட்டை அவர் எப்போதும் மறுத்தே வந்துள்ளார்.


கடந்த சில ஆண்டுகளாக இவர் பல முறை சிறைப் பிடிக்கப்பட்டாலும் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். வழக்குத் தொடுநர்கள் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டனர். பசீர் சென்ற ஆண்டு ஆகத்து மாதத்தில் ஆச்சே மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.


2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாலிக் குண்டுவெடிப்புகளில் இவர் சம்பந்தப்பட்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டு பின்னர் 2006 இல் விடுவிக்கப்பட்டிருந்தார். அப்போது 88 ஆத்திரேலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட 202 பேர் கொல்லப்பட்டனர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]