ஈரானில் பயணிகள் விமானம் வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து
ஈரானில் காஸ்வின் மாகாணத்தின் அமைவிடம்

புதன், சூலை 15, 2009 ஈரான்:

168 பேருடன் சென்ற ஈரான் பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஈரான் நாட்டின் காஸ்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தூப்பொலியெவ் பயணிகள் விமானம் ஒன்று, ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து ஆர்மேனியத் தலைநகர் யெரெவான் நோக்கி சென்று கொண்டிருந்தது.

153 பயணிகள் மற்றும் 15 விமான சிப்பந்திகளுடன் சென்ற அந்த விமானம் ஈரானின் வடமேற்கு பகுதியிலுள்ள கஸ்வின் மாகாணத்தில் ஜனாட்டாபாத் என்ற கிராமத்திற்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென நொருங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

அந்த விமானம் முற்றிலும் நொறுங்கி தீப்பிழம்புடன் கீழே விழுந்ததாகவும், இதனால் அந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கஸ்வின் அவசரகால சேவை துறை இயக்குனர் ஹோசீன் என்பவர் தெரிவித்தார்.

விமானம் விபத்துக்குள்ளான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், விமானம் நொருங்கி விழுந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்