ஏசுநாதர் காலத்து சுட்ட மண்ணால் தயாரிக்கப்பட்ட தட்டு கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 1, 2009, ஜெருசலேம், இசுரேல்:


ஜெருசலேமின் பழைய நகரில் ஒரு புதர் பகுதியில் அகழ்வாய்வு நடத்திய போது சுட்ட மண்ணால் தயாரிக்கப்பட்ட ஒரு தட்டு கிடைத்துள்ளது. இங்கிலாந்து நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஜெருசலேம் நகரில் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய ஆராய்ச்சிப் பணியின் விளைவாக இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஏசுநாதர் காலத்து பொருட்களை கண்டு பிடித்து, அதன் மூலம் பல உண்மைகளை அறிந்து கொள்ள முடியும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். நீண்ட நாள் ஆய்வுக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.


அந்த தட்டில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்கள் ஹிப்ரு அல்லது அரபிக் மொழியின் தொடக்கக்கால வடிவங்களாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.


இந்த மண் தட்டு எதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற ஆய்வும் உடனடியாக நடந்தது. சாப்பிடுவதற்கு முன்பு கை கழுவுவதற்கு இத்தகைய தட்டு பயன்படுத்தப்பட்டது என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.


ஏசுநாதரும் தினமும் உணவு சாப்பிடும் முன்பு இது போன்ற ஒரு மண் தட்டில்தான் கை கழுவி இருக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பான கூடுதல் தகவல்கள் சிமோன் கிப்சன் என்பவர் எழுதிய "த பைனல் டேய்ஸ் ஆப் ஜீசஸ்" என்ற நூலில் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது.

நன்றி: மாலை மலர்