கோடையில் பனி இல்லாத ஆர்க்டிக் உருவாகலாம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 15, 2009


வடதுருவ ஆர்க்டிக் கடலில் பனிக்கட்டியாக உறைந்திருக்கும் நீர் அடுத்த பத்து ஆண்டு காலத்திலேயே கோடைக் காலங்களில் கிட்டத்தட்ட முற்றும் முழுதாய் உருகிவிடும் ஓர் ஆபத்து இருப்பதாக புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.


ஏற்கனவே கணித்திருந்த காலத்தைவிட மிகவும் முன்கூட்டியே இந்த நிலை ஏற்படலாம் என்பதை புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு வருடத்தில் பல மாத காலம் புவியின் வடதுருவத்தில் உறைபனியே இல்லாத நிலை உருவாகும்.


பிரித்தானியாவின் முன்னணி துருவ ஆராய்ச்சி நிபுணரான கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் வாதம்ஸ் இந்தக் கணிப்பைச் செய்துள்ளார்.


இந்த ஆண்டில் முன்னதாக ஆர்க்டிக் உறைகடல் மீது கிட்டத்தட்ட முன்நூறு மைல்கள் நடந்து சென்ற வழியெல்லாம் பனிப்படலத்தின் ஆழத்தை அளந்து திரும்பிய பென் ஹேடோ மற்றும் அவருடைய சகாக்கள் சேகரித்து வந்த தகவல்களை வாதம்ஸ் ஆராய்ந்துள்ளார்.


எதிர்பார்த்த அளவை விட ஆழம் குறைவாய் இருப்பதாகவும் பழைய பனிக்கட்டிகளைவிட அடர்த்தி குறைவாக இருப்பதாகவும் பனிப் படலம் இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மூலம்