சந்திரயான்-1 விண்கலத்தின் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தது

விக்கிசெய்தி இலிருந்து
படிமம்:Chandrayaanliftoff.jpg
2008 இல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-1 ஏவப்பட்டது

சனி, ஆகத்து 29, 2009, பெங்களூரு, இந்தியா:


இந்தியாவின் ரூ. 400 கோடி மதிப்பிலான நிலவை ஆராய்வதற்கான கனவுத் திட்டமான சந்திரயான்-1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் தாம் இழந்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.


சந்திரயான் கலத்தில் இருந்து வந்துகொண்டிருந்த சமிஞ்சைகள் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் முழுமையாக நின்றுவிட்டதாகவும், தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த செய்யப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.


கலன் செயல் இழந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்படுவதாக இந்த திட்டத்தின் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.


சந்திரயான்-1 திட்டம் இத்துடன் முடிவுக்கு வந்து விட்டது.

—திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை

கடந்த ஆண்டு 2008, அக்டோபர் 22ஆம் தேதியன்று சென்னைக்கு வடக்கேயுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் கடந்த நவம்பர் மாதத்திலும் பின்னர் இவ்வாண்டு ஜூன் மாதத்திலும் பல சிக்கல்களை சந்தித்திருந்தது. சந்திரயான் விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சூடு ஆகிய பிரச்சினைகளைச் சந்தித்தது.


சந்திரயான் பயணத்தின் அறிவியல் நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாகவும், தாங்கள் பெற எண்ணிய தரவுகளில் 95 சதவீதம் வரையிலானவை கிடைத்துவிட்டதாகவும் திட்ட இயக்குனர் அண்ணாதுரை பிபிசியிடம் கூறினார். நிலவை அடைவது மற்றும் நிலவு குறித்த புகைப்படங்களை அனுப்புவது ஆகிய முக்கியப் பணிகளை சந்திரயான் ஏற்கனவே முடித்து விட்டதாக இஸ்ரோ கூறுகிறது. நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆய்வையும் சந்திரயான் மேற்கொண்டது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]