தார்பூர் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஐநா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து
சூடானில் தார்ஃபூர் பிரதேசம்

வியாழன், ஆகத்து 27, 2009, சூடான்:

ஆறு ஆண்டுகள் நடைபெற்ற மோதல்களுக்கு பிறகு தார்பூரில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்துவிட்டதாக, சூடானின் தார்ஃபூர் பகுதியில் இருக்கும் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் தளபதி கூறியுள்ளார்.


தற்போது அங்கு கொள்ளைக் கூட்டத்தினரின் நடமாட்டமே இருப்பதாக, ஐக்கிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய கூட்டுப் படைகளின் அப்பகுதிக்கான தலைமைப் பொறுப்பிலிருந்த தளபதி ஜெனரல் மார்ட்டின் அக்வாய் அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சாட் நாட்டில் உள்ள தார்ஃபூர் அகதிகளின் முகாம்

2003 ஆம் ஆண்டில் டார்ஃபூர் பகுதியில் மோதல் தொடங்கியதை அடுத்து அங்கிருந்து இரண்டரை லட்சம் மக்கள் தமது வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்; மேலும் மூன்று லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


தார்பூரில் தற்போது நீதி மற்றும் சமத்துவத்துக்கான இயக்கம் (ஜெம்) என்ற தீவிரவாதக் குழு மட்டுமே இயங்குகிறது என்று மார்ட்டின் அக்வாய் தெரிவித்தார். அதுவும் இப்போது மிகவும் பலமிழ்ந்துள்ளது என்றும், இவ்வியக்கத்தினால் தற்போது நாட்டின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


அங்கு கிளர்ச்சியாளர்களையும் அரசாங்கத்தையும் மீண்டும் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூலம்[தொகு]