தீக்குளிப்புக்குத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட திபெத்திய மதகுரு ஒருவருக்கு மரணதண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 31, 2013

திபெத்தியர்கள் எட்டுப் பேரைத் தீக்குளிக்கத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட திபெத்திய மதகுரு ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனையும், அவரது உறவினர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டதாக சீன அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.


லொராங் கொன்ச்சொக், 40, மற்றும் லொராங் செரிங்கு, 31, ஆகியோருக்கு சிச்சுவான் மாகாண நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் தமது குற்றச்சாட்டுகளை வற்புறுத்தலின் பேரிலேயே ஒப்புக்கொண்டுள்ளனர் என திபெத்திய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


2009 ஆம் ஆண்டில் இருந்து ஏறத்தாழ 100 திபெத்தியர்கள் வரை சீன ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தீக்குளித்துள்ளனர், இவர்களில் பலர் இறந்துள்ளனர். இந்நிகழ்வுகளில் பெரும்பாலானவை திபெத்துக்கு வெளியே திபெத்தியர்கள் வாழும் வாழும் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.


இவ்வாறு தீக்குளித்தவர்கள் பலர் திபெத்திய மதகுருக்களும் சந்நியாசினிகளும் ஆவர். கூடுதலான மத சுதந்திரம் கோரியும், ஆன்மிகக் குரு தலாய் லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரியும் இவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


மூலம்[தொகு]