நேபாள துணை ஜனாதிபதி இந்தி மொழியில் பதவியேற்றது செல்லாது எனத் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 31, 2009, கத்மண்டு, நேப்பாளம்:


நேப்பாளத்தின் துணை ஜனாதிபதியான பரமானந்த ஜா, பதவி ஏற்றபோது, அவர் இந்தி மொழியில் பதவிப் பிரமாணம் செய்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் இந்தி மொழியில் பதவி ஏற்றது செல்லாது என்றும், 7 நாட்களுக்குள் நேபாளி மொழியில் பதவி ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


நேபாள அரசும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொள்ளும்படி பரமானந்த ஜாவை கேட்டுக்கொண்டது. ஆனால் பரமானந்த ஜாவுக்கு நீதிமன்ற உத்தரவின்படி நடந்துகொள்ள விரும்பாததால், அவர் நீண்ட கால விடுமுறையில் செல்ல இருப்பதாக அவரின் உதவி யாளர்கள் தெரிவித்தனர்.


இதற்கிடையில் நிருபர்களிடம் பேசிய பரமானந்த ஜா, நேபாளத்தில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் அங்கீகாரம் வழங்கும் சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நான் மீண்டும் பதவி ஏற்பது பற்றி பரிசீலிப்பேன் என்று கூறினார்.


நீதிமன்ற உத்தரவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. நான் ஏற்கனவே ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் முன்னிலையில் கடந்த ஆண்டு பதவி ஏற்றுக்கொண்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்[தொகு]