போலந்தில் இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட 2,000 பேரின் உடல்கள் மீளடக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 14, 2009, போலந்து:


போலந்தில் பெரும் சவக் கிடங்கு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் இறுதிப் பகுதியில் கொல்லப்பட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமானோரின் உடல்கள் இராணுவ மயானம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டன.


ஜெர்மனி-போலந்து எல்லையில் வட-மேற்குப் போலந்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போலந்து மற்றும் ஜெர்மனிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


போலந்தின் அமைவிடம்

1945 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உலகப்போரின் முடிவின் போது இறந்த ஜெர்மனியக் குடிமக்களின் உடல்கள் இவை என நம்பப்படுகின்றது.


கடந்த ஆண்டு (2008) அக்டோபர் மாதத்தில் மால்போர்க் என்ற போலந்து நகரத்தில் இந்த சவக்கிடங்கு க்கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வுடல்கள் அனைத்திற்கும் டி.என்.ஏ சோதனைகள் செய்வதற்கு அதிக செலவாகும் என்ற காரணத்தினாலும், இச்செலவை ஏற்றுக்கொள்ள எந்த நாடும் முன்வராத காரணத்தினாலும், இவை அடக்கம் செய்யப்படுகின்றன. சோவியத்தின் செம்படைகள் இந்நகரத்தில் தாக்குதலில் ஈடுபட்டபோது இடையில் அகப்பட்டு இறந்த உள்ளூர் மக்களின் உடல்கள் இவை என நம்பப்படுகிறது. இவ்வுடல்களில் பெரும்பான்மையானவை பெண்கள், மற்றும் சிறுவர்களுடையவை என்பது குறிப்பிடத்தக்கது. அந்நேரத்தில் மால்போர்க் நகரம் ஜெர்மனி நாட்டுடன் இருந்தது.

மூலம்[தொகு]