மல்தோவாவில் இருந்து பிரிந்து சென்ற திரான்சுனிஸ்திரியாவில் அரசுத்தலைவர் தேர்தல்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 25, 2011

கிழக்கு ஐரோப்பிய நாடான மல்தோவாவில் இருந்து தன்னிச்சையாகப் பிரிவினையை அறிவித்த திரான்சுனிஸ்திரியா (திரான்சுனேத்தர்) தனது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரண்டாம் கட்ட வாக்கெடுப்பை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது.


மல்தோவாவில் திரான்சுனிஸ்திரியா (மஞ்சள்)

திரான்சுனேத்தரின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் எவ்கேனி செவ்ச்சுக், மற்றும் மேலவை தலைவர் அனத்தோலி காமின்ஸ்கி ஆகியோர் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் போட்டியிடுகின்றனர். முதற்கட்ட வாக்கெடுப்பில் இவர்கள் முறையே 38.55 வீதமும், 26.3 வீதமும் பெற்றனர்.


தற்போதைய அரசுத்தலைவர் ஈகர் சிமீர்னொவ் 24.66 வீத வாக்குகளையே பெற்றிருந்தார். ஐந்தாவது தடவையாக அரசுத்தலைவராக வருவதற்கு அவர் எடுத்த முயற்சிகளுக்கு கிரெம்ளின் ஆதரவு தரவில்லை.


உருசிய மொழி பேசும் திரான்சுனிஸ்திரியா குடியரசு 1990 ஆம் ஆண்டில் மல்தோவாவில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது. உருசிய, மல்தோவிய மற்றும் திரான்சுனிஸ்திரியக் கூட்டுப் படைகள் அங்கு நிலை கொண்டுள்ளன. திரான்சுனிஸ்திரியா முழுமையான விடுதலையை எதிர்பார்த்தாலும், மல்தோவா தன்னுடைய நாட்டின் இறைமையுள்ள சுயாட்சி அமைப்பை மட்டுமே வழங்குவதற்கு தயாராக உள்ளது.


மூலம்[தொகு]